ஷாமாவின் தம்பியான பாவாஜி சாவூல்கிணற்றுக்கு அருகில் வசித்து வந்தார். பாவாஜியின் மனைவிக்கு அடிவயிற்றில் இரண்டு கட்டிகள் இருந்தது. அதனால் அடிக்கடி காய்ச்சலும், வாந்தி பேதியும் ஏற்பட்டது.
அந்த கட்டியின் வலி தாளாமல் பாவாஜியின் மனைவி துடிதுடித்து தினமும் தனது கணவரிடம் அழுது புலம்பினாள். இந்த வேதனையைப் பொறுக்க முடியாத பாவாஜி ஷீர்டிக்கு வந்து, தனது அண்ணன் ஷாமாவிடம் தனது மனைவிபடும் துன்பத்தை பற்றிக் கூறி உதவும்படி வேண்டினார்.
ஷாமா அவரை உடனடியாக மசூதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே பாபாவை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கச் சொன்னார். அப்போது ஷாமா பாபாவிடம், தனது தம்பி மனைவியின் துயரத்தை எடுத்துக் கூறி, "பாபா! தாங்களே வைத்தியருக்கெல்லாம் வைத்தியர் ! தாங்களே இவர்களைக் காப்பாற்ற வேண்டும் !" என்று கூறி, தற்போதைக்கு தனது தம்பியுடன் ஊருக்கு போகவும் அனுமதி கேட்டார்.
பாபா ஷாமாவிடம் உதியைக் கொடுத்து , 'இந்தா! இந்த உதியை கட்டிகளின் மீது பூசச் சொல்! கொஞ்சத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் குடிக்க வை! இந்தப் பின்னிரவு நேரத்தில் நீ போக வேண்டாம். காலையில் போய் பார்த்துவிட்டு உடனே திரும்பி விடு!" என்றார்.
பாபாவிடமிருந்து உதியைப் பெற்றுக் கொண்ட ஷாமாவின் தம்பி நேராக தனது வீட்டிற்கு சென்றார். அங்கு தனது மனைவிக்கு கட்டிகள் இருந்த இடத்தில் உதியைப் பூசிவிட்டு, கொஞ்சம் உதியை தண்ணீரிலும் கலந்து கொடுத்தார். அடுத்த நிமிடமே அவளுக்கு வலி குறைந்து வியர்த்துக் கொட்டி ஜுரம் இறங்கியது. தூக்கமும் வந்தது. நன்றாக தூங்கி காலையில் எழுந்து பார்த்தால், வயிற்றுக்கடியிலிருந்த கட்டியைக் காணவில்லை. வாந்தி பேதியும் நின்றிருந்தது. பாவாஜியின் மனைவி பாபாவின் லீலையை எண்ணி வியந்தார்.
காலை நேரம் பசித்ததால் எழுந்து டீ போடத் துவங்கினாள். அந்த நேரம் ஷாமா அங்கு வந்தார். நேற்றிரவு முழுவதும் உடம்பு சரியில்லாமல் இருந்த பெண் சுறுசுறுப்பாக டீ போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த ஷாமா அதிசயித்தார். "காலையில் போய் பார்த்துவிட்டு உடனே திரும்பிவிடு!" என்ற "பாபாவின் வார்த்தைகள் எத்தனை சத்தியமானவை" என்று எண்ணி புல்லரித்து கண் கலங்கி நின்றார்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil