ஆலந்தி எனும் கிராமத்தில் வசித்தவர் ஒரு துறவி. என்னதான் சம்சார வாழ்க்கையில் துறவறம் பூண்டிருந்தாலும், ஊழ்வினை காரணமாக அவர் காதில் தாளமுடியாத வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.
துறவியின் வேதனையைக் கேள்விப்பட்ட அந்த கிராமத்து விவசாயி ஒருவர் துறவியிடம் சென்று, "அய்யா ! ஷீரடி என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கே சாய்பாபா எனும் சாது ஒருவர் இருக்கிறார். அவர் தரும் உதியே பக்தர்களின் கடும் நோய்களையும் தீர்த்து விடுவதாக பலனடைந்தோர் கூறுகின்றனர். தாங்களும் அங்கு சென்றுதான் பாருங்களேன்!" என்றார்.
அதைக் கேட்ட துறவி உடனடியாக ஷீரடிக்கு சென்றார். அங்கே இருந்த ஷாமாவை அணுகி விபரத்தைக் கூற, ஷாமாவும் அவரை பாபாவிடம் அழைத்துச் சென்றார்.
ஷாமா பாபாவிடம் மெதுவாக , "பாபா ! இவருக்கு காதில் சொல்லமுடியாத வலியும் வீக்கமும் பல வருடங்களாக இருந்ததால் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். ஆனாலும் அந்த வலியும் வீக்கமும் இன்னும் குறைந்தபாடில்லை ! டாக்டரிடம் கேட்டால் இன்னொரு ஆபரேஷன் செய்யவேண்டும் என்று கூறுகிறாராம். இரவு முழுவதும் தூக்கமில்லாமல் அரற்றுகிறார். தாங்கள் உதி அளித்து ஆசி அளிக்க வேண்டும் என்று விரும்புகிறார். !" என்றார்.
பாபா அந்த துறவியை அருகில் அழைத்து, "அல்லாஹ் அச்சா கராஹே !" என்று கூறி தனது உதியை அவரது காதில் ஊதினார். துறவியும் பாபாவை பணிவுடன் வணங்கிவிட்டு ஊர் திரும்பினார்.
ஒருவாரம் கழித்து ஆலந்தி சுவாமிகள் ஷாமாவுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதில் "தனக்கிருந்த காது வலியும் வீக்கமும் பாபா ஊதிய காற்றிலேயே பறந்துவிட்டதாகவும் , ஆபரேஷன் எதுவும் தேவையில்லை என்று டாக்டர் தீர்க்கமாக சொல்லிவிட்டதாகவும், பாபாவே எனது கண்கண்ட தெய்வம் !" என்றும் எழுதி இருந்தார்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil