பம்பாயில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தவர்
திரு.பிரதான். ஆச்சாரமான, மிகச் சிறந்த பக்திமான். இவரது ஏழு வயது மகன் திடீரென இறந்துவிட்டான். இந்த திடீர் நிகழ்வு பிரதானை பெரிதும் உலுக்கியது. அவருக்கு ஐந்து மகான்கள் கனவில் வந்து ஆறுதல் கூறினர். அவர்களில் ஒருவர் சாய்பாபா. அக்கணமே பாபாவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு ஷீர்டிக்குச் செல்ல வேண்டும் என எண்ணினார்..
அந்த எண்ணத்தில் சிறிதும் தாமதிக்காமல் ஷீர்டிக்குச் சென்று பாபாவைத் தரிசித்தார். அப்போது பாபா, "மண் மண்ணோடு சேர்ந்ததற்கு முட்டாள்தனமாக அழலாமா? ஒருநாள் நாமும் அங்கே போக வேண்டியவர்கள்தானே?" என்று கூறியதும் பிரதான் தம்பதிகள் அசந்து போயினர். மேலும் பாபா, அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்த மரங்களைக் குறிப்பிட்டு க்ஷேமம் விசாரித்தார்.
அதேநேரம், பிரதானின் குடும்ப ஆலோசகராகவும் அவர்கள் வீட்டில் பூஜை, ஹோமம், சுபகாரியங்கள், திதி முதலானவற்றை நடத்தும் பூஜாரியாகவும் இருந்த மாதவ்பட்டுக்கு , பிரதான் குடும்பத்தினர் பாபாவை வழிபடுவது பிடிக்கவில்லை.
பிரதானின் மற்றொரு மகன் பாபு நிமோனியா காய்ச்சல் முற்றி ஜன்னி வந்து பிதற்றிக் கொண்டிருந்தான். பாபுவைப் பரிசோதித்த டாக்டர்கள் அவன் அபாயகட்டத்தில் இருப்பதாகக் கூறினர்.
"இதற்கு காரணம், ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த நீங்கள் முஸ்லிம்பக்கிர் பாபாவை வழிபட்டதால் ஏற்பட்ட அபச்சாரமே !" என்று மாதவ்பட் கூறினார்.
அன்று இரவு மாதவ்பட் கனவில் பாபா தோன்றி, " பாபுவுக்கு காய்ச்சல் வந்ததற்கு நான் காரணமா ?" என்று அதட்டலாகக் கேட்டார். அதைக் கண்டு மிரண்ட மாதவ்பட் கனவைப் பற்றி யாரிடமும் கூறவில்லை.
மறுநாள் பிரதான் வீட்டில் மாதவ்பட் நடத்திய யாகம் பூஜை ஜபங்களும் பலிக்காமல் போக, பாபுவின் நிலை முன்பைவிட மோசமானது. இவனையும் இழந்துவிடுவோமோ என்று பிரதான் தம்பதியர் கண்ணீர் உகுத்தனர்.
மாதவ்பட் மனம் திருந்தியவராக தன் அஹங்காரத்தை விடுத்து, பூஜை அறையில் இருந்த பாபாவின் படத்தின் முன் விழுந்து, "பாபா ! உன்னையே முழுமுதற் தெய்வமாக எண்ணிக் கும்பிட்ட பக்தர் வீட்டில் துக்கம் வரலாமா? இன்று மாலை நான்கு மணிக்குள் குழந்தை கீழ் தளத்துக்கு வர முடிந்தால், நீங்களே மும்மூர்த்திகளின் அவதாரம் தத்தாத்ரேயர் என்பதை ஒப்புக்கொள்கிறேன் !" என மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்.
என்ன ஆச்சர்யம்! பாபுவின் காய்ச்சல் படிப்படியாக குறைந்து, முனகல் புலம்பல் நின்று நினைவு திரும்பியது. சரியாக மாலை 4 மணிக்கு, "அப்பா ! நான் கீழே வந்து படுத்துக் கொள்கிறேனே?" என்று கேட்க, ஆச்சர்யத்தோடு பார்த்த மாதவ்பட் பாபாவின் படத்தின் முன் வெட்கித் தலைகுனிந்தார். "அந்த நொடி முதலே மாதவ்பட் பாபாவின் தீவிர பக்தரானார்".